ஞாயிறு, 9 மார்ச், 2014

கவிதை விளையாட்டு

என்னுடன் விளையாட வருமாறு
அழைத்தது கவிதை

மறுப்பதற்கு காரணமேதும் அகப்படவில்லை
மட்டுமின்றி
விளையாடும் பருவம்
இன்னும் முடிந்துவிடவில்லையெனக்கு

ஐந்து கற்களைப்
பொறுக்கித் தந்தது
கவிதை

ஐந்து சொற்களைப்
பொறுக்கித் தந்தேன்
நான்

சொற்களை தன் தலைக்குமேலே
வீசிப்பிடித்து விளையாடி
இப்படித்தான் விளையாட வேண்டுமென்று கற்றுக்கொடுத்தபடி விளையாடியது
கவிதை

நானும் கற்களை
வீசிப்பிடித்து விளையாடத் தொடங்கினேன்

ஆட்டம் முடிந்த பின்
என் உடல்
காயங்களால் நிரம்பியிருந்தது

கவிதை
மற்றுமொரு
கவிதையாகி இருந்தது

நான் தோற்றிருந்தேன்
கவிதை வென்றிருந்தது

கருத்துகள் இல்லை: