திங்கள், 9 ஜூலை, 2012

நீயும், வயலும்

1. உனது கண்கள் நாற்று நட்ட
வயலின் விளைச்சலைச் சேமிக்க
பத்தாயம் இருக்கிறதா
உன்னிடம்?

2. ஆழ உழுதன
உனது பார்வைகள்

நீர் பாய்ச்சின
உனது கண்கள்

விதை தூவின
உனது உதடுகள்

களை பறித்தன
உனது கைகள்

வயலானது
நிலம்

3. உனது காலடிச் சத்தம் கேட்டு
வளைக்குள் பதுங்கிக் கொள்கின்ற
அந்த நண்டுச் சொற்கள்
நீ திரும்பிப்போனபின்
வயல் முழுக்க
ஊர்ந்து விளையாடுகின்றன

4. கறுப்பும் வெளுப்புமாய்
உனது முகத்தில்
எப்போதுமிருக்கின்ற
அவ்விரு ஆடுகளைக்கொண்டே
நலம் விசாரிக்கிறாய்
இந்தப் பசுமையான வயலை

5. நீ துரத்தி வந்த தும்பி
நீர்தேங்கிய வயல் மேல்
பறக்கிறது இப்போது

உனது கால்கள் தயங்கி நிற்க
உடைந்து சிதறமுடியாத வருத்தத்தில்
உறைந்து கிடக்கிறது
வயல் நீரில் வானம்

கருத்துகள் இல்லை: