திங்கள், 9 ஜூலை, 2012

நீயும், குளமும்

1. நீ பொரிபோட்டு
வளர்த்த மீன்களைப்
பொத்திப் பொத்தி
வளர்க்கிறது குளம்

2. சதுரக்குளத்தின் நடுவே
கல்லெறிகிறாய்

வட்டமாகவேப் பரவுகின்றன
எல்லா அலைகளும்

3. கடைசிப் படிக்கட்டில்
அப்பியிருக்கின்றன
நீ அரைத்துப்பூசிய
மஞ்சளின் துணுக்குகள்

அருகிலிருந்தும்
கலக்க முடியாத தவிப்பில்
அலைகிறது
குளத்து நீர்

4. பசித்த மீன்களுக்கு உணவாய்
உனது முக நிலவு

கூடும் பசியுடன்
குறையாத நிலவோடு
நீள்கிறது இவ்விரவு

5. குளித்து முடித்து
ஏறிச்செல்லும்போது
படிக்கட்டுகளில்
உனது ஈரச்சுவடுகள்

நீ குளத்தை விட்டு
நீங்கியதற்கான
அடையாளங்கள்
அவை

கருத்துகள் இல்லை: