திங்கள், 25 ஜூன், 2012

வளையலோசை

மார்கழி அதிகாலையில்
ஆவி பறக்கும் தேநீராய்
உனது கோப்பையில் நிரம்புகிறது அது

கலைந்து கிடக்கும்
உனது புத்தகக் குவியலை
அடுக்கி வைத்து
ஞாயிற்றுக்கிழமையைச்
சபித்துக் கொண்டிருக்கிறது அது

ருசித்துப் பழகிய
உனது நா சுவைத்து மகிழ
சமையற் குறிப்புகளை மேய்கிறது அது

துடித்தடங்கும்
உனது இச்சையைத்
தாலாட்டி உறங்க வைக்க
படுக்கை விரிக்கிறது அது

அன்பு, அக்கறை, காதல் என
வெவ்வேறு பெயர்களில்
நீ வீசும் வலைகளில்
சிக்கிக் கொள்ளத் துடிக்கிறது அது

கருத்துகள் இல்லை: