ஞாயிறு, 24 ஜூன், 2012

மாடனென்பேன் என்னை

முகம் சிதைந்த மாடனின் புருவங்களுக்கு நடுவில்
கொழுந்து விட்டெரியும் பிணத்தீயில்
பீடி பற்ற வைக்கும் முனைப்பில்
என் நகரும் வேர்கள்
முன்னெப்போதுமில்லா வேகத்தில்
சுழன்று வருகின்றன

சுரக்கும் மழையை சொட்டிக்கொண்டிருக்கும்
அவனது புறந்தள்ளிய நாக்குகளை
அறுத்தெரிய
நகங்களைக்
கூர்தீட்டிக் கொள்கிறேன்

மல்லாந்து செத்தவனின் முகத்தில் புதைந்திருக்கும்
இரண்டு வானத்தை
உருட்டிப் பிசைந்து மிரட்டும் அவனை
ஜன்னல் கிராதியில்
முகம் பொத்தி ரசிக்கிறேன்

முற்றிய சாதிச் சண்டைநாளில்
வெடித்துச் சிதறிய அந்தியை
கன்னங்களில் பூசிக்கொண்டிருக்கும்
மாடனின் புருவ வில்லைப் பிடுங்கியெடுத்து
அம்பு பொருத்துகிறேன்

என் முகத்தில் முளைத்த
கோரப் பற்களின் கூர் முனையில்
எழுதுகிறேன் என் பெயரை
மாடனென்று

கருத்துகள் இல்லை: