ஞாயிறு, 24 ஜூன், 2012

ஓவியா அல்லது வனதேவதை

கடந்த பத்து நாட்களாக
வீடெங்கும் விரவிக்கிடந்த
ஓவியா இல்லாத
அந்த வெறுமையை எட்டி உதைக்க
வந்து சேர்ந்தாள்
மறுபடியும் அவளே

நட்டிருந்த கொய்யாச் செடியைக் காட்டி
என்ன செடியென்றேன்
அவளிடம்

மீன் செடியென்று சொன்னாள்

மாம்பழத்தைக் காட்டிக் கேட்டபோது
மீன்பழம் என்றாள்

அவள் விரும்பிச் சாப்பிடும்
கெழுத்தியின் மீசைமுடியை
ஞாபகமூட்டி
கிளப்பினாள் என்னை
மீன்கடை நோக்கி

மீசையொன்றை வைத்துக்கொள்ளும் ஆசையால்
அவதிப்பட்டு வந்த அவள்
சப்பாத்திக்குப் பிசைந்த மாவில்
மூக்குக்குக் கீழே ஒட்டிக்கொண்டாள்
கோதுமை மீசையை

நாய் கதை, பூனை கதை, கிளி கதை
கேட்டுக்கேட்டுச் சலித்துப் போன அவள்
செடி கதை, இலை கதை, மாமா கதை,
டிவி கதை, தெரு கதை, கதவுக் கதை,கண் கதை, கை கதை,
போர்வைக் கதை, சைக்கிள் கதை, பந்து கதை
என புதுப்புதுக் கதைகளைச்
சொல்லச் சொல்லி
உறங்காமலும், உறங்க விடாமலும் ஆக்கினாள்
அவ்விரவை

இப்போது
படிமங்கள் பூத்துக்குலுங்கும்
வனதேவதை உலவுகிறாள்
எனது வீட்டில்

கருத்துகள் இல்லை: